
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் தொடர்ந்து இலவசமாக கேட்டு வாங்கும் கறிவேப்பிலையின் விலை ரூ.150 ஆக உயர்ந்துள்ளது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்கள், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.91.98ஆகவும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.85.31 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் சதம்: ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13 காசுக்கு விற்பனை செய்யப்படுவதால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலவசமாக கேட்டு வாங்கும் கறிவேப்பிலை ரூ.150: பெட்ரோல், டீசல், சமையல் எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் காய்கறிகளின் விலையும் இரு தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தைவிட காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.129-க்கும், பெரிய வெங்காயம் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், காய்கறி கடைக்காரர்களிடம் இலவசமாக கேட்டு பெறப்படும் கருவேப்பிலையின் விலை திடீரென ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த கறிவேப்பிலை, சேலத்தில் ஒரு கிலோ கறிவேப்பிலை ரூ.150 ஆகவும், மதுரையில் ரூ.100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இலவசமாக கேட்டு பெறப்படும் கறிவேப்பிலையின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து குடும்ப தலைவிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.