சென்னை: குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் 24 - 30 டிகிரி செல்சியஸ் அளவிலேயே குளிர்நிலையை வைத்திருக்க வேண்டும் என்றும், கரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான விதிமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி முதல் தமிழக அரசுக்குச் சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட 702 பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குளிர் சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.