திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், 569 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் தலைமை வகித்தார். மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன், மாவட்ட சமூக நலத்துறை தனித்துணை ஆட்சியர் கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நலத்துறை வட்டாட்சியர் மகேஷ்குமார் வரவேற்றார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதியோர் உதவித்தொகை 404 பேருக்கு, ரூ.48 லட்சத்து 48 ஆயிரம், விதவை உதவித்தொகை 112 பேருக்கு ரூ.13 லட்சத்து 44 ஆயிரம், மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு ரூ.5 லட்சத்து 88 ஆயிரம் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் 4 பேருக்கு ரூ.48 ஆயிரம் என, மொத்தம் 569 பேருக்கு, ரூ.68 லட்சத்து 28 ஆயிரத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன் ஆகியோர் வழங்கினர்.
விழாவில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் லதா,கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் டி.எம்.பஷீர் அஹம்மது, எம்.உதயகுமார், மேலப் பள்ளி வாயில் நிர்வாகச் செயலாளர் எல்.எம். முஹம்மது அஷ்ரப், சமூக ஆர்வலர்கள் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவாக, வட்டாட்சியர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.