திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய குடியேறும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 ஆக உள்ள மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும், தனியார் வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றனர்.
இந்தப் போராட்டத்தில், மாவட்டத் தலைவர் டி.ஜெயபால், மாவட்ட பொருளாளர் ஆர்.காளியப்பன் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.