'சாகும்வரை பேச்சினால் மக்களைத் தட்டி எழுப்புவேன்': மதுரையில் தா.பாண்டியனின் உருக்கமான கடைசிப் பேச்சு
மதுரை: உடல் நலம் குன்றிய நிலையிலும் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உருக்கமான பேச்சு, அவரது கடைசி பொது நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் பிப்.18-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பங்கேற்றார். உடல்நலக்குறைவால் சக்கர நாற்காலி மூலம் மேடைக்கு அழைத்து வரப்பட்ட அவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டே பேசினார்.
இதையும் படிக்கலாமே.. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆகச் சிறந்த பேச்சாளரான தா. பாண்டியன்
அவர் பேசுகையில், "மேடையில் எழுந்து பேச ஆசைப்பட்டாலும் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. நின்று பேசுவதற்கு எனது கால்கள் ஒத்துழைக்காவிட்டாலும் மூளை என்னோடு ஒத்துழைக்கிறது. நான் அமர்ந்து பேசினாலும்கூட எனது மண்டை சரியாக உள்ளது. நான் அமர்ந்து பேசினாலும், நின்று பேசினாலும் எனது உடலில் உயிருள்ளவரை எனது கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன். சாகும்வரை எனது பேச்சினால் மேடைகளைத் தட்டி எழுப்புவேன், கம்யூனிசம் என்ற செம்படையை எந்த கொம்பனாலும் வீழ்த்த இயலாது" என்று குறிப்பிட்டார்.
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நிரூபித்த நக்கீரர் வாழ்ந்த மதுரை மாநகரில் நடைபெறும் இது மாநாடு மட்டுமல்ல, வரும் தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெறும் என்பதை பிரகடனம் செய்யும் கூட்டம் தான் இது" என்று குறிப்பிட்ட அவர் தனது வழக்கமான உரையால் மத்திய, மாநில அரசுகளின் குறைகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.