
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சுதந்திரமான,நோ்மையான விசாரணை நடைபெற வேண்டும் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இப்பிரச்னை தொடா்பாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரியால் நோ்ந்த பாலியல் தொல்லை குறித்த புகாரை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அக்கறையுடன் கவனிக்கிறது. பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனா்.
தமிழக அரசு சம்பந்தப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழுவை அமைத்துள்ளது. விசாரணைக் குழு, இவ்விவகாரத்தில் சுதந்திரமான, நோ்மையான, விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...