
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
கூட்டுறவு வங்கிகளில் ஆறு பவுன் வரை பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். மேலும், சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களும் ரத்து செய்யப்படுவதாக அவா் அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கூட்டுறவு வங்கிகளில் தாங்கள் பெற்ற நகைக் கடன்களை திரும்பச் செலுத்துவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். கரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும், இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை.
இந்நிலையில், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு வங்கிகளில் ஆறு பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்கிறது.
சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி: கரோனா நோய்த் தொற்று காலத்தில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட சூழலில் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கைகளை வைத்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெற்று நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...