தாராபுரம் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து
திருப்பூர்: தாராபுரத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சர்ச் ரோடு பகுதியில் பிரபல ரமணா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 5-க்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் மருத்துவ மனைக்கு மேலே உள்ள மூன்றாவது தளத்தில் உள்ள மருத்துவரின் வீட்டின் அறையில் மாட்டி வைக்கப்பட்டிருந்த எல்இடி டிவி ஷார்ட் சர்க்யூட் ஆனதால் ஹாலில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. இதனால் புகை மண்டலம் சூழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக கீழ் பகுதியில் இருந்த செவிலியர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தீயணைப்புத்துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலானா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தினால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின்போது ரமணா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தாமோதரன்(65), தேவி தாமோதரன்(60),
விக்னதர்ஷன்(36), சத்யா விக்ன தர்ஷன்(34), நிக்க்ஷிதா(12) ஆகியோர் இருந்தனர். இவர்களில் சத்யா மற்றும் நிக்க்ஷிதா உள்ளிட்ட 2 பேர் மட்டும் புகையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தீ விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.