சென்னை: மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க, நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சுரேந்திரநாத் கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகள் குடிநீர் பிரச்னையும் ஏற்பட்டது. இதற்கு நிலத்தடி நீரை முறையாக சேமிக்காததே காரணம்.
அண்மையில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் நேரடியாக கடலுக்குச் சென்று வீணானது. மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிலத்தடி நீர் மேலாண்மை இல்லாதததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அதிகப்படியான நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக அரசு வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.