போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரிகரித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 44-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசுடன் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 7-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் 40 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில், போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு இன்று நிராகரிகரித்திருப்பது கவலைக்குரியது; அதேசமயம் மிகுந்த கண்டனத்திற்குரியது!
நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்பதை தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.