சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட தும்பல் ஊராட்சி பகுதியைச்சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர், செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிக்குச் சென்று வந்த நிலையில், சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்துள்ளார்.
அவருடைய பரிசோதனை முடிவு வியாழக்கிழமை காலையில் வந்துள்ளது. அதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்த சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளியை சுத்தம் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிச் செல்வதற்கு முன்பே, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்து கொண்ட நிலையில், அவர் பள்ளிகள் திறந்ததும் பள்ளிக்கு வந்திருப்பதகாவும், தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் விளக்கம் அளித்துள்ளார்.
அவருக்கு பள்ளியில் கரோனா பரவவில்லை, கிராமத்தில் இருந்தபோதே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் இருந்த மாணவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
பள்ளி மாணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பள்ளி வழக்கம் போல திங்கள்கிழமை முதல் செயல்படும் என்றும் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.