சென்னை: ஜனவரி 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட வளாகம் 27.1.2021 அன்று திறந்துவைக்க இருப்பதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது சம்பந்தமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கு நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.