உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கைக் கடற்படையினரால் மோதி படகு கவிழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் 4 மீனவர்களின் சடலங்களும் சனிக்கிழமை பிற்பகலில் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன.
உயிரிழந்த மீனவரின் சடலத்துக்கு மாலை அணிவித்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
உயிரிழந்த மீனவரின் சடலத்துக்கு மாலை அணிவித்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை: இலங்கைக் கடற்படையினரால் மோதி படகு கவிழ்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் 4 மீனவர்களின் சடலங்களும் சனிக்கிழமை பிற்பகலில் கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன.

ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் (52), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சன்டார்வின் (28), திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகிய 4 பேரும் கடந்த ஜன. 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகுத் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

கடந்த 20ஆம் தேதி காலை கரை திரும்பியிருக்க வேண்டிய இவர்களின் விசைப்படகு திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இலங்கைக் கடற்படைப் படகு மோதியதால்தான் இவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படையின் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கினர். 20ஆம் தேதி இரவு இரு சடலங்களும், 21ஆம் தேதி பகலில் இரு சடலங்களும் அவர்களால் மீட்கப்பட்டன. இலங்கையில் சட்டப்பணிகள் முடித்த பிறகு 4 பேரின் சடலங்களும் சனிக்கிழமை காலை இலங்கையில் இருந்து எடுத்து வரப்பட்டன.

சடலங்களைப் பெற்று வருவதற்காக கோட்டைப்பட்டினத்தில் இருந்து இரு படகுகளில் மீனவர்களும், மீன்வளத் துறை அலுவலர்களும் சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்றனர். இந்திய கடல் எல்லையில் 4 பேரின் சடலங்களும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து 4 பேரின் சடலங்களும் கோட்டைப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.30 மணிக்கு கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கோட்டைப்பட்டினம் சென்றனர்.

அங்கு மீனவர்களின் சடலங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ. ரத்தினசபாபதி, சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மீன்வளத் துறை இணை இயக்குநர் சர்மிளா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து வந்த மீனவர்களின் உறவினர்கள் சடலங்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com