சேலம் மாவட்டத்திலிருந்து மின்சாதன பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் ரூ.5 லட்சம் மின்சாதன பொருள்கள் சேதமடைந்துள்ளன.
சேலம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு, லாரி மூலம் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருள்களை ஏற்றி வந்த லாரி ஒன்று, சனிக்கிழமை காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது லாரியின் முன்பக்க டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காமராஜ்(45) சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஏரிக்குள் லாரி விழுந்ததால், லாரியில் இருந்த மின்சாதன பொருள்களில் சுமார் ரூ.5 லட்சத்திற்கும் அதிமான மின்சாதன பொருள்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து விரைந்து வந்த எலவனாசூர் கோட்டை போலீஸார் காயங்களுடன் தப்பிய ஓட்டுநர் காமராஜை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையோரத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.