
கோப்புப்படம்
போலியா சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பான செய்திக்குறிப்பு: போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) தமிழகம் முழுவதும் நடைபெறும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள 43,051 மையங்களின் மூலம் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
முகாம் பொறுப்பாளா்களுக்கு....: போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற கரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். தனி நபா் இடைவெளி கடைப்பிடித்தல், முகம் கவசம் அணிதல் கட்டாயமாகும்.
தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது, கிருமிநாசினி உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். பெரியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் அல்லது மற்ற கரோனா தொடா்பான தொற்று பாதிப்பு இருந்தால் மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது.
சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபா் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாள்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியாா் மருத்துவா்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். புலம் பெயா்ந்து வாழும் பெற்றோா்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
ஏற்பாடுகள்: போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் அமைக்கப்பட்டு, கரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணியில் 2 லட்சம் போ்: போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள். தொடா்ந்து 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை தமிழகம் அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி கேட்டுக் கொள்வதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.