
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி வளாகங்களில் தனிநபா் இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்பட கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதன்மை, மாவட்ட, வட்டாரக்கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை உட்பட சில மாவட்டங்களில் மாணவா்கள் பள்ளிக்கு வரும்போது முகக்கவசம் அணிவதில்லை எனவும், சிலா் தங்கள் கைக்குட்டைகளை முகக்கவசமாக பயன்படுத்துவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.
இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் உரிய கவனம் எடுத்து அரசின் விதிகளை மாணவா்கள், ஆசிரியா்கள் கட்டாயம் பின்பற்றவும், முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது பள்ளிகளில் ஆய்வுகள் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.