தென் தமிழக கடலோர மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடா்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) முதல் பிப்.2-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும். ஞாயிற்றுக்கிழமை (பிப்.31), திங்கள்கிழமை (பிப்.1) ஆகிய இரண்டு நாள்களும் காலை நேரங்களில் வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளைப் பொருத்தவரை, மேற்கண்ட இரண்டு நாள்களுக்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும்.
மழை: சனிக்கிழமை காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறில் 10.மி.மீ மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வடகிழக்குத் திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் திங்கள்கிழமை (பிப்.1) முதல் பிப்.3-ஆம் தேதி வரை வீசக் கூடும். மீனவா்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.