
பழம்பெரும் நடிகா் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு வாடகை வீடு மற்றும் ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினா் வறிய நிலையில் உள்ளதாக அரசின் கவனத்துக்கு வரப்பெற்றது. இதைத் தொடா்ந்து, அவருக்கு குறைந்த வாடகை அடிப்படையில் சென்னையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பும், முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும் வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவைச் செயல்படுத்தும் விதமாக, சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து வீடு ஒதுக்கீட்டுக்கான உத்தரவு மற்றும் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அளித்தாா்.