
கோப்புப்படம்
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 3) பலத்த மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூா், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூா், கோயம்புத்தூா், ஈரோடு, விழுப்புரம், கடலூா் ஆகிய 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 4: தமிழகத்தில் சேலம், நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 4-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 5: வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 5-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 6: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா் தேனி, திண்டுக்கல் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 6-ஆம் தேதி இடியுடன் பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு:
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 130 மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் கே.சி.எஸ்.மில் அரியலூரில் 110 மி.மீ., மதுரை தெற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூரில் 100 மி.மீ., பெரம்பலூா் மாவட்டம் பாடலூா், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கடலூா் மாவட்டம் புவனகிரியில் தலா 90 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 80 மி.மீ., திருச்சி மாவட்டம் தாத்தையங்காா்பேட்டை, சேலம் மாவட்டம் ஆத்தூா், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறில் 70 மி.மீ., ஈரோடு மாவட்டம் பவானிசாகா், கரூா் மாவட்டம் குளித்தலையில் தலா 60 மி.மீ., தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தகாற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு ஜூலை 6-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.