திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு 

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கோவிலில் நிலுவையில் உள்ள சாலை, கோபுரப்பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்ப
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கோவிலில் நிலுவையில் உள்ள சாலை, கோபுரப்பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளும் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், திருக்கோவிலில் நிலுவையில் உள்ள சாலை, கோபுரப்பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் முக.ஸ்டாலின் ஆணையின்படி, 79.9 ஏக்கரிலான திருக்கோவிலின் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களின் மதிப்பு ரூ.500 கோடிக்கும் மேலாகும். முருகனின் திருத்தலமான அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடான இந்த முருகன் கோவிலில் பக்தர்களின் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் கடந்த காலங்களில் விரைவு படுத்தப்படாமல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

ஜீலை 1 ஆம் தேதி முதல்வர் தலைமையில் இந்து சமயம் அறநிலையத்துறை வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு முதல்வர் துறைச்சார்ந்த ஆணையர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் ஆய்வு மேற்கொள்வதாக கூறியிருந்ததைத் தொடர்ந்து, பல்வேறு பணிகள் தடைபட்டிருந்ததை ஆய்வில் அறிந்துகொள்ள முடிந்தது. 

திருக்கோவிலுக்கு புதிய ராஜ கோபுரம் கட்டிய பிறகு அந்த ராஜ கோபுரத்தின் வழியாக முருகனை தரிசித்து செல்வதற்கான படிகட்டுகள் இன்னும் அமைக்கப்படாமல் இருக்கின்றன. அவை ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு, தொல்லியல்துறை அனுமதிக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதை விரைவுப்படுத்துவதற்கு சம்பந்தபட்ட அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர்களும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.  

இத்திருக்கோவிலின் அடிவாரத்தில் குளம் இருக்கின்றன. பக்தர்கள் கிருத்திகை போன்ற நாள்களில் விசேஷமாக நீராட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அந்த குளமும் 9 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. தூர்வாரப்படாமல் இருக்கும் இந்த குளத்தின் பணிகளையும் உடனடியாக தூர்வார மேற்கொள்ளப்படவுள்ளது. பக்தர்கள் தங்கும் விடுதிகள் 250-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய விடுதிகள் உள்ளன. அவைகளும் பக்தர்கள் தங்குகின்ற அளவிற்கு நல்ல சூழ்நிலையில் இல்லாததால் உடனடியாக அதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

மேலும், முருகன் திருக்கோவில் அடிவாரத்தில் இருந்து மேல் நோக்கி வரும் பொழுது இடையில் இருந்த ஒரு மண்டபம் சிதலமடைந்து அதை அப்புறப்படுத்த இருக்கின்றது. அந்த இடத்திலும் புதியதாக ஒரு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நடைபயணமாக வருகின்ற பாதையில் ஒரு குளமும் பராமரிக்கப்படாமல் சிதலமடைந்துள்ளது. 

முருகன் சன்னிதானத்தின் மேற் பகுதியில் ஒரு குளமும் சிதலமைடைந்துள்ளது. அந்த குளத்தினையும் சீர்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வெள்ளித்தேர், தங்கத்தேர் என்று இரண்டு தேர்கள் உள்ளது. அந்த இரண்டு தேர்களும் 8 ஆண்டு காலமாக பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த தேர்களையும் விரைவில் ஓட வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது. 

முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த திருக்கோவிலுக்கு படிகள் அதிகம் இருப்பதால் மூத்தோர்கள், முதியோர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு கடினமான சூழ்நிலை இருப்பதை அறிந்து ரோப்கார் வசதியை ஏற்படுத்தி தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். அந்த ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொண்டு, அதற்குண்டான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்குண்டான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஏற்கனவே நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் ஓர் ஆண்டு காலத்திற்குள் இந்த பணிகளை நிறைவு செய்வதற்குண்டான போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நடைபெறுகின்ற திருமணங்களுக்குண்டான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண காலங்களில் அதிகமான திருமணங்கள் நடைபெறுதவற்கான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமண தம்பதியினர், திருமண குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் தங்குவதற்கு மலையின் அடிவாரத்தில் நல்ல சூழ்நிலைக்கேற்ப சிறந்த முறையில் தங்கும் விடுதிகள் அமைப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த திருத்தலமான அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகப்பெருமானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார். 

ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் ச.சந்திரன், திருக்கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com