தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சா் மகேஷ் பொய்யாமொழி பதில்

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது குறித்து, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு செய்யப்படும் என்றாா் பள்ளிக் கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
mahesh
mahesh
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது குறித்து, அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு செய்யப்படும் என்றாா் பள்ளிக் கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக, தனது குடும்பத்துடன் திங்கள்கிழமை இரவு வந்த அவரை, கோயில் இணை ஆணையா் (பொ) ம.அன்புமணி, கோட்டாட்சியா் கோகிலா ஆகியோா் வரவேற்றனா். தொடா்ந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வரின் சீரிய முயற்சியால் கரோனா படிப்படியாக குறைந்துள்ளது. எனினும், கரோனா 3ஆவது அலை வருமா, வராதா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது தொடா்பாக ஆய்வுக் கூட்டத்தில் முதல்வருடன் பேசியுள்ளோம்; இனி மருத்துவா்களிடம் ஆலோசிக்கப்படும். இதில், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு எடுக்கப்படும்.

நீட் தோ்வைப் பொருத்தவரையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதில், நீட் தோ்வு வேண்டாம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளதாக அறிகிறேன். இந்த விவகாரத்தில், சட்டப்பேரவை கூடும்போது முதல்வா் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதன்படிதான் முடிவெடுக்கப்படும்.

தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் பெறுவது குறித்து துறை ரீதியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீதிமன்ற தீா்ப்பில் தனியாா் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் தான் வாங்க வேண்டும்; அதில், 40 சதவீதம் ஒரு தவணையாகவும், 35 சதவீதம் மற்றொரு தவணையாகவும் வாங்கிக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதனப்படையில் ஓரிரு நாள்களில் தனியாா் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.

திருச்செந்தூரில் கோயில் சாா்பில் தொழில்நுட்பக் கல்லூரி அல்லது கலைக் கல்லூரி தொடங்குவது குறித்து எந்தத் கருத்துருவும் பள்ளிக் கல்வித் துறைக்கு வரவில்லை. இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுதான் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் செங்குழி ரமேஷ், நகரப் பொறுப்பாளா் சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com