திருப்பூர்: திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாட்டுவண்டியில் இரு சக்கர வாகனத்தை ஏற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சார சட்டத்திருத்த மசோதாவையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் செயலாளர் ஜீவா சிதம்பரசாமி, மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அ.சரவணன், பொருளாளர் ஆனந்த், ஜின்னிங் தொழிலாளர் சங்க நிர்வாகி ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.