
கொட்டும் மழையில் தமிழக-கேரள எல்லையில் ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன்
கம்பம்: தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் கம்பம் மெட்டு எல்லை சோதனைச் சாவடியில் கொட்டும் மழையில் தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார்.
தமிழக-கேரள எல்லையை குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய மூன்று மலைச்சாலைகள் இணைக்கின்றன.
ஜூலை 8 முதல் 14 வரை குமுளி நகரம் மட்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி வழியாக கேரளம் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கேரளத்துக்குச் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் இ- பாஸ் மற்றும் மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் மூலம் கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக கேரளத்துக்குள் செல்கின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பலத்த சாரல் மழைக்கு இடையே தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன் தமிழக- கேரள எல்லைப் பகுதியான கம்பம்மெட்டு சோதனைச் சாவடிக்கு வந்தார்.
தமிழக போலீஸாரிடம் சோதனைச்சாவடிகள் பயணிகளை அனுமதிப்பது பற்றி விசாரணை நடத்தினார்.
கேரள மாநில கம்பம்மெட்டு காவல்நிலைய காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜானிராணியிடம் கேரள அரசின் நடைமுறைகள் பற்றி கேட்டறிந்தார்.
பின்னர், தமிழக வனத்துறை, காவல் மற்றும் சுகாதாரத்துறை சோதனைச் சாவடியில் பணியில் இருந்தவர்களிடம் சோதனைகள் பற்றி கேட்டறிந்தார்.
உடன் மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில், தாசில்தார் சுருளி மைதீன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வின்போது பலத்த சாரல் மழை பெய்தது.