மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 02.02.2018ஆம் தேதி அன்று தீ விபத்து காரணமாக வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. புதுப்பிக்கும் பணிகள் பல ஆண்டுகளாக தாமதமாக நடைபெற்று வந்தது.
இப்பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக கடந்த 18.06.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வில் விரைவில் கட்டடப்பணிகளை முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதன் பேரில் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பட்டினம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக 16.07.2021 அன்று இரண்டு கனரக வாகனங்களில் கற்கள் கொண்டு வந்து மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கூடல் செங்குளம் பண்ணையில் இறக்கி வைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இப்பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக மேற்பார்வையிட்டு வருகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.