ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் மின்கசிவு காரணமாக சலவைத் தொழிலாளியின் வீடு எரிந்து நாசமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி, 32. இவர் மிட்டப்பள்ளியில் சலவைத் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 1.30 மணியளவில் பூங்கொடியின் குடிசை வீட்டில் திடீரென கூரை தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ மளமளவென பரவியது.
அருகிலிருந்தவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருந்தபோதிலும் கூரை வீட்டில் இருந்த டி.வி.எஸ்.எக்ஸ்.எல் இருசக்கர வாகனம் மற்றும் 50 புடவைகள், 30 சட்டை உள்ளிட்ட ஆடைகள் தீயில் கருகி சேதமானது.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.