புதுச்சேரியில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் படகுகளுடன் கருப்புக்கொடி ஏந்தி கடலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் காலாப்பட்டு தொடங்கி மூர்த்தி குப்பம் வரை 18 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பத்தாயிரம் மீனவர்கள் வரை உள்ளனர்.
இந்தநிலையில் புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் அண்மைகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதன்படி அரசு தரப்பில் வாய்மொழியாக அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி மீனவர்கள்.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியைச் சேர்ந்த 18 மீனவ கிராமத்தினர் ஆயிரம் பேர் வெள்ளிக்கிழமை புதுச்சேரி கடற்கரையோரம் காந்தி திடல் எதிரே கடல் பகுதியில் விசைப்படகுகளுடன் திரண்டு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பங்கேற்றுள்ள 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இதனால் மீன்வளம் சுரண்டப்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கடற்கரையில் மீனவர்கள் இருக்கக் கூடாது என்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிடுமாறு அவர்கள் வலியுறுத்தினர். எனினும் மீனவர்கள் காலை 10 மணி முதல் பகல் 11 மணி வரை போராட்டத்தை தொடர்ந்தனர்.