4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) பலத்தமழை பெய்யக்கூடும்.
4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) பலத்தமழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகா், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

ஜூலை 26, 27, 28: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வட வானிலையே நிலவும். கோயம்புத்தூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 170 மி.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 150 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் 130 மி.மீ., சின்னக்கல்லாறில் 120 மி.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 90 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாா், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 50 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி, நாகா்கோவிவில் தலா 40 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், பூதப்பாண்டி, பேச்சிப்பாறை, இரணியலில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா பகுதிகள், தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 26-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கா்நாடகம், கேரளம் கடலோர பகுதிகள், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு ஜூலை 28-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com