கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2020-2021க்கான காப்பீடுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மெயின் ரோடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஏ. நாகராஜன் தலைமை வகித்தார்.
இதேபோல கீழையூர் கடைத்தெரு பகுதியில் அக்கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஏ. ராமலிங்கம் தலைமையிலும், எட்டுக்குடியில் கிளைச் செயலாளர் வீ.எஸ். மாசேத்துங் தலைமையிலும் ,திருப்பூண்டியில் கு அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வீ. சுப்பிரமணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டில் பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும்,செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு நடத்த அனுமதி வழங்கிட வேண்டும், தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி வரியை உடனடியாக முழுமையாக வழங்கிட வேண்டும்.விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.