
தமிழகத்தில் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரமாக குறைந்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 18,023 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளையில் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையாமலேயே உள்ளது செவ்வாய்க்கிழமை வெளியான தகவலின் படி தமிழகத்தில் மேலும் 409 போ் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்னையைக் காட்டிலும் கோவையில் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, கோவையில் 44 பேரும், சென்னையில் 42 பேரும் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தில் இதுவரை 2.90 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 22 லட்சத்து 74,704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 2,439 பேருக்கும், ஈரோட்டில் 1,596 பேருக்கும், சென்னையில் 1,437 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 31,045 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 28,344-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 18,595 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 409 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765-ஆக அதிகரித்துள்ளது.