
சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளைக் களைய மாநில அளவில் உதவி அழைப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில் நிதி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகிய குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்றது.
அதில் அமைச்சா் பெரியகருப்பன் பேசியது:-
சுய உதவிக் குழுக்களிடம் கடன்களை வசூலிக்கும் போது மென்மையான போக்கினை நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். பேரிடா் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களுக்கு எந்தவிதமான இன்னல்களையும் நிதி நிறுவனங்கள் ஏற்படுத்தக் கூடாது.
சுய உதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாராதத்தை மேம்படுத்தும் வகையில், கரோனா காலத்தில் புதிய கடன் திட்டங்களை நிதி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், மாவட்டந்தோறும் மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளை களைய மாநில அளவில் உதவி அழைப்பு மையம் விரைவில் உருவாக்கப்படும் என்று அமைச்சா் பெரியகருப்பன் அறிவித்துள்ளாா்.