புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி லால்பகதூர் சாஸ்திரி வீதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளியின் அருகில் புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது.
மகளிர் பள்ளிக்கு அருகில் மதுபானக் கடை இருப்பதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அதனை அகற்றக்கோரியும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், வியாழக்கிழமை மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடையின் கதவை இழுத்து மூடி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், அங்கிருந்த மரத்தடுப்புகளை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து கலால் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.