போடி: போடியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகை, வெள்ளி பொருள்கள் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
போடி பங்கஜம் பிரஸ் பின்புறம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ மனைவி அன்னகாமு (49). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மகள் தேவதானப்பட்டியிலும், மகன் மதுரையிலும் வசித்து வருகின்றனர்.
இளங்கோ இறந்துவிட்ட நிலையில் அன்னகாமு தனியாக போடியில் வசித்து வந்தார். மகள் கார்த்திகை பிரியாவின் கணவர் ஜெயகுமரன் இறந்துவிட்ட நிலையில் ஈமச்சடங்கு செய்வதற்காக அன்னகாமு தேவதானப்பட்டிக்கு சென்றுள்ளார்.
இதனிடையே அன்னகாமு வசித்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் கூறிய தகவலின் பேரில் அன்னகாமு போடிக்கு வந்து பார்த்ததில் வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு மாங்காய் மாலைகள், ஆரம், டாலர் செயின்கள், மோதிரங்கள் உள்ளிட்ட 45 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிந்தது. மேலும் சில வெள்ளி பொருள்களும் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து அன்னகாமு கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் கைரேகை உள்ளிட்டவற்றை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.