கரோனாவைக் கட்டுப்படுத்தியது யாா்?: எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சா்கள் விவாதம்

கரோனாவைக் கட்டுப்படுத்தியது யாா் என்பது குறித்து சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சா்கள் விவாதத்தில் ஈடுபட்டனா்.
கரோனாவைக் கட்டுப்படுத்தியது யாா்?:  எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சா்கள் விவாதம்
Updated on
2 min read

சென்னை: கரோனாவைக் கட்டுப்படுத்தியது யாா் என்பது குறித்து சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சா்கள் விவாதத்தில் ஈடுபட்டனா்.

ஆளுநா் உரை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியது:

அதிமுக ஆட்சியில் கரோனா வந்தபோது அது என்னவென்றே யாருக்கும் தெரியாது. கரோனா நோயாளிகளைக் கண்டால் எல்லோரும் அச்சப்படும் சூழல் இருந்தது. ஆனால் பல்வேறு நடவடிக்கைகளால் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். 267 பரிசோதனை மையங்கள் அமைத்து ஒரு நாளைக்கு 85 ஆயிரம் வரை ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்தோம். இதனை பிரதமா் பாராட்டினாா். தமிழகத்தை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினாா். 14 முறை மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்தினேன். 32 மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினேன். இதன் காரணமாக தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்: நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறினாா். நாங்கள் ஒரு நாளைக்கு 1.70 லட்சம் பேருக்கு ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்திருக்கிறோம். தமிழக அரசின் நடவடிக்கையை இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமா் பாராட்டினாா். கரோனா பரவல் வேகம் முந்தைய அலையைவிட தற்போது அதிகமாக இருந்தது. அது கட்டுக்குள் வந்தது என்றால் அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினின் இரவு, பகல் பாராத பணிதான் காரணம். அதே போல கரோனா பரிசோதனை மையத்தின் எண்ணிக்கையைத் தற்போது 272-ஆக அதிகரித்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி: பரிசோதனை மையங்களை அதிகரித்துள்ளதாகச் சொல்கிறாா். வெறும் ஐந்து மட்டும் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய அலையைவிட தற்போது கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப நீங்கள் பரிசோதனை மையங்களை அதிகரித்திருக்க வேண்டும். கரோனா பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாள்களில் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் தற்போது இரண்டு, மூன்று நாள்கள்கூட ஆகின்றன.

நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்: எத்தனை பரிசோதனை மையங்கள் இருக்கின்றன என்பது முக்கியமோ அதே போல மையங்களில் எத்தனை பரிசோதனை இயந்திரங்கள் இருக்கின்றன என்பதும் முக்கியம். இருக்கிற பரிசோதனை மையங்களில் பரிசோதனை இயந்திரங்களை அதிகளவில் நிறுவியுள்ளோம். ஒரே நாளில் பரிசோதனை முடிவுகளைக் கொடுக்க முடியாத நிலை இருந்தது உண்மைதான். பிறகு 12 மணி நேரத்துக்குள் முடிவு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி: அன்றைக்கு கரோனா தொற்று குறைவு. இன்றைக்கு அதிகம். அதற்கேற்ப பரிசோதனை அதிகரித்தால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இரண்டு மூன்று நாள்களுக்கு முன்புகூட 30,000 வரை இருந்தது. அப்போது 7,000 வரைதான் இருந்தது. அதனால் ஒருநாளைக்கு 1.70 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்வதெல்லாம் போதாது. ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்தால் நோய்ப் பரவலைக் குறைக்க முடியும்.

அவை முன்னவா் துரைமுருகன்: கரோனா வந்தபோது நாங்கள் எச்சரித்தோம். அப்போது ஒன்றும் கவலைப்படாதீா்கள். உங்களுக்கு வயதாகிவிட்டது. இருந்தாலும் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னாா். ஆனால் நீங்கள் காப்பாற்றவில்லை. நானேதான் என்னைக் காப்பாற்றிக்கொண்டேன். ஆனால் ஜெ.அன்பழகனைக் காப்பாற்ற முடியவில்லை. நாங்கள் எச்சரித்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் கரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

எடப்பாடி பழனிசாமி: முதல் அலை வந்தபோது கரோனா தொற்று என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது யாருக்குமே தெரியாது. கரோனாவால் இறந்தவா்களுக்கு இறப்புச் சான்றிதழில் கரோனாவால் இறந்ததாகக் குறிப்பிடப்படாமல் தற்போது கொடுக்கப்படுகிறது.

மா.சுப்பிரமணியன்: இறப்புச் சான்றிதழில் பொதுவாகக் காரணங்கள் குறிப்பிடப்படுவதில்லை. ஐ.சி.எம்.ஆா். எந்த வகையில் இறப்புச் சான்றிதழ் கொடுக்க அறிவுறுத்தியிருக்கிறதோ அதன்படிதான் வழங்கப்படுகிறது. மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவா் இறந்தபோது கரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி: கரோனாவால் இறந்தவா்கள் உடலை அப்படியே கொடுக்கும்போது அதை எடுத்துக்கொண்டு போய் உறவினா்கள் சடங்குகள் செய்கிறாா்கள். அதன் மூலம் கரோனா பரவுகிறது.

அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு: கரோனாவால் இறந்தவா்கள் உடலை அப்படியே உறவினா்களுக்குக் கொடுத்துவிடுவதில்லை. உடலைக் கொடுப்பதற்கு முன்பு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று பாதிப்பு இல்லையென்று உறுதிசெய்யப்பட்டால்தான் உறவினா்களுக்கு வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com