யூடியூப் தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.
இணையத்தில் பெண்கள் குறித்து அபாசமாக பேசிய கணவருக்கு உடந்தையாக இருந்ததால் கிருத்திகா என்பவர் கடந்த 16ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஜூன் 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், 8 மாத கைக்குழந்தையுடன் நீதிமன்றக் காவலில் இருந்த கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
இணையத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி யூடியூப்பில் நேரலை செய்து வந்தவர் பப்ஜி மதன் என அறியப்படும் மதன். இவர் விளையாட்டின் இடையில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பதிவிட்டு வந்தார்.
பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அநாகரீகமான முறையில் பேசி வந்த நிலையில் பப்ஜி மதனை கைது செய்ய வேண்டும் என புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். நேரில் ஆஜராகாத பப்ஜி மதன் தலைமறைவானார்.
இதனையடுத்து அவர்மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதனின் மனைவி கிருத்திகாவை விசாரித்த காவல்துறையினர் மதனுடன் இணைந்து அவரது மனைவியும் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனின் மனைவியை காவல்துறையினர் ஜூன் 16ஆம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நேரலை விளையாட்டின்போது எதிர்தரப்பில் மதனுடன் பேசியது அவரது மனைவிதான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதனின் மனைவிக்கு ஜூன் 30 வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த பப்ஜி மதனும் கடந்த ஜுன் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.