பவானி: பவானி சட்டப்பேரவைத் தொகுதிகள் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 100 மீட்டர் நீளம் கொண்ட விழிப்புணர்வு பதாகையுடன் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பவானி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பவானி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் கண்ணன் பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். 18 வயது பூர்த்தியான, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்த தேர்தல் முறையில்100% வாக்குப்பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, ஏப். 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என பிரசாரம் செய்யப்பட்டது.
வட்ட வழங்கல் அலுவலர் ராவுத்த கவுண்டர், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 100 மீட்டர் நீளத்துக்கு விழிப்புணர்வு பதாகையை பொதுமக்கள் சத்துணவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏந்தி சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.