தேர்தல் எதிரொலி: வியாபாரிகளின்றி வெறிச்சோடிய கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை
ஈரோடு கருங்கல்பாளையம் வாரச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கரவை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இதில் கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் அதிகளவு வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். இதேபோன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவு வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். சராசரியாக ஒவ்வொரு வாரமும் ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
தற்போது தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அந்த பணங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வரத் தயங்குகின்றனர்.
கடந்த சில வாரங்களாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. அதேபோல் கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தற்போது கரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்த மாநில வியாபாரிகள் இ-பாஸ் பெற்று வரவேண்டும். இதன் காரணமாகவும் வியாபாரிகள் வரத் தயங்குகின்றனர். இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடியது. ஒரு சில உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர்.
இன்று கூடிய மாட்டுச் சந்தையில் வளர்ப்புக் கன்று 100, பசுமாடு 450, எருமை மாடுகள் 200 என மொத்தம் 750 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் வளர்ப்புக் கன்றுகளை 10 முதல் 15 ஆயிரம் வரையும், பசுமாடு ரூ. 30 முதல் 70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ. 30 முதல் 55 ஆயிரம் வரையும் விற்பனையானது.