தஞ்சாவூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தஞ்சாவூருக்கு புதன்கிழமை இரவு வந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த அவர் ஜனவரி மாதத்தில் விடுதலையானார்.
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், தஞ்சாவூருக்கு கார் மூலம் புதன்கிழமை இரவு வந்தார். தஞ்சாவூர் அருளானந்த நகரிலுள்ள கணவர் நடராஜன் இல்லத்தில் தங்கியுள்ளார்.
தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில் உள்ள குல தெய்வமான வீரனார் கோவிலில் வியாழக்கிழமை காலை நடைபெறும் நடராஜன் சகோதரரின் பேரக் குழந்தைகளுக்கான காதணி விழாவில் பங்கேற்றுள்ளார்.
மேலும், தஞ்சாவூரில் தொடர்ந்து மூன்று நாள்களுக்குத் தங்க உள்ளார் என்றும், மார்ச் 20 ஆம் தேதி நடராஜனின் நினைவு நாளையொட்டி விளார் சாலையில் உள்ள அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் எனவும் கூறப்படுகிறது.