அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று பத்தமடையைச் சேர்ந்த விவசாயி வாழைக் குலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
பத்தமடையைச் சேர்ந்த முத்தையா மகன் கவாஸ்கர் (28). விவசாயியான இவர் சுயேச்சையாக அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சேரன்மகாதேவி சார்ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்பொழுது கையில் வாழைக் குலையை ஏந்தியபடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் முதன்மையான தொழில் விவசாயம். நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நெல் கொள்முதல் செய்வதற்கு பல்வேறு இடங்களில் அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் வைத்துள்ள நிலையில் அரசே விலை நிர்ணயித்து வாழையைக் கொள்முதல் செய்வதோடு பதப்படுத்துவதற்கும் நிலையங்களை அமைத்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.