சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி நடைபெறும் வாகன சோதனைகளின் மூலமாக இதுவரை ரூ.208.84 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழக தோ்தல் துறை வெளியிட்ட செய்தி:
தமிழக பேரவைத் தோ்தலை ஒட்டி, நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சோதனைகளின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதன்கிழமை நிலவரப்படி ரூ.208.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ரொக்கப் பணமாக இதுவரை ரூ.76.27 கோடியும், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.116.06 கோடி மதிப்பிலான ஆபரணங்களும், ரூ.1.42 கோடியிலான மதுபானங்களும், ரூ.14.67 கோடி மதிப்பிலான சேலைகள், துணிகள், இதர பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.208.84 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், ஆபரணங்கள், பரிசுப் பொருள்கள் ஆகியன இதுவரை பறிமுதல் ஆகியுள்ளதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.