காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஊராட்சி செயலர் ஒருவர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் க.சுந்தர். இவருக்கு ஆதரவாக சாலவாக்கம் ஊராட்சி செயலர் வெ.சதீஷ்(43)தனது கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுடன் அவரது இல்லத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ஆதாரப்பூர்வமாகப் புகார் வந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டத்தில் அவர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கி.முத்துக்குமார் வெ.சதீஷை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.