தம்மம்பட்டி பகுதியில் பி.எஸ்.என்.எல். போன், இன்டர்நெட் சேவை, அரசு கேபிள் டி.வி. ஆகியவை 24 மணி நேரமாக முடங்கியுள்ளது.
கெங்கவல்லி அருகே பி.எஸ்.என்.எல். கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், தம்மம்பட்டி பகுதியில் பி.எஸ்.என்.எல். போன், நெட் சேவை மற்றும் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு ஆகியவை 24 மணி நேரமாக முடங்கியுள்ளது.
சேலத்தில் இருந்து ஆத்தூர், கெங்கவல்லி,வீரபனூர், தம்மம்பட்டி பகுதிக்கு, தரையில் பதிக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். கேபிள் வழியாக, தமிழக அரசு கேபிள் டி.வி.யின் லிங்க் இணைந்து செல்கிறது. அதன் மூலம், அந்தந்த பகுதியின் அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள், வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்புகள் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு, கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் தொடக்கப்பள்ளிக்கு எதிரே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், மண் அள்ளுவதற்காக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, நிலத்தடியில் பதித்திருந்த பி.எஸ்.என்.எல். கேபிள் துண்டானது.
அதனால், கூடமலை, தகரப்புதூர், மூலப்புதூர், செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி,உலிபுரம், வாழக்கோம்பை, கீரிப்பட்டி ஆகிய தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் பி.எஸ்.என்.எல். போன் இணைப்புகள், நெட், அரசு கேபிள் டி.வி. இணைப்புகள் 24 மணி நேரமாக முடங்கி உள்ளது.
இன்று பிற்பகல்தான், அதற்கான இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கேபிள் இணைப்பு சீர் செய்யப்படும் என, தம்மம்பட்டி அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள் தெரிவித்தனர்.