
அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 11.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது.
முதல்வர் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முடிவுகள் எடுக்கப்பட்டன.
ரெம்டெசிவிர் மருந்துகள் அனைவருக்கும் உரிய முறையில் விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது.
மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜனை முறையாக பயன்படுத்துவகை உறுதி செய்ய வேண்டும். எந்த சூழலிலும் ஆக்சிஜன் விணாகக் கூடாது.
பொது முடக்கத்தை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். பொது முடக்கத்தை முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை அளிப்பதை கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடுவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவம், வருவாய், காவல், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.