கடலூர்: கடலூர் சிப்காட்டில் கிரிம்ஸன் ஆர்கானிக் பிரைவட் லிமிடெட் என்ற ரசாயனம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை காலை திடீரென பாய்லர் வெடித்து ரசாயனம் கசிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் சிப்காட்டில் பாய்லர் வெடித்து ரசாயனம் கசிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரா.ராஜ்குமார்(42), செம்மங்குப்பத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் கணபதி (25), காரைக்காடு சேர்ந்த செந்தில் குமார் மனைவி சவீதா (35), பரங்கிப்பேட்டை சேர்ந்த விசேஷ்ராஜ் (25) ஆகியோர் இறந்தனர். மேலும், 20 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் தொழிலாளர் நல துறை அமைச்சர் சி.வெ.கணேசன்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்த மருத்தவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய இழப்பீடு பெற்று தரப்படும். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.