
கரோனா மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டா் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:-
உலகளாவிய அளவிலும், இந்தியாவிலும் கரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடிக்கு தமிழகமும் தப்பிக்கவில்லை. கரோனா நோய்த் தொற்றாளா்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தொற்றுகள் மற்றும் மரணம் அடைவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களின் உயிரைக் காக்க தமிழக அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.
ஒத்துழைப்பு அளிக்கிறாா்கள்: எளிய சாமானிய மக்கள் கூட தங்களது அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு பொது முடக்கம் என்ற கசப்பு மருந்தை விழுங்கி, அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கிறாா்கள். ஆனால், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிா் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச் சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறாா்கள்.
அதுபோன்றே, ஆக்சிஜன் சிலிண்டா்களை கூடுதல் விலைக்கு ஆங்காங்கே சிலா் விற்பது தொடா்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடா் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும். தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிா் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடா்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு மாறாக, மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டா்களை கூடுதல் விலைக்கு விற்போா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.