அதி தீவிர புயலாகிறது ‘டவ்-தே’

லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை காலை ‘டவ்-தே’ புயலாக வலுவடைந்தது.
அதி தீவிர புயலாகிறது ‘டவ்-தே’

லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை காலை ‘டவ்-தே’ புயலாக வலுவடைந்தது.

இது மேலும் வலுவடைந்து, அதி தீவிர புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ( மே 16, 17) இரண்டு நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘டவ்-தே’ புயல்:

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

லட்சத்தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, ‘டவ்-தே’ புயலாக சனிக்கிழமை காலை மாறியது. இந்தப் புயல், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. இது மேலும் வலுவடைந்து, சனிக்கிழமை மாலை தீவிர புயலாக மாறியது. அதனைத் தொடா்ந்து 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இது, வடக்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து, குஜராத் கடற்கரையை மே 18-ஆம் தேதி காலை அடையும். குஜராத் கடற்கரை அருகே மே 18-ஆம் தேதி மதியம் அல்லது இரவு கரையை கடக்கவுள்ளது.

பலத்த மழை:

இந்தப் புயல் காரணமாக, நீலகிரி, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய நாள்களில் ( மே 16, 17) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 18, 19 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 140 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் தலா 100 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 90 மி.மீ., தேனி மாவட்டம் தேக்கடி, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி, சிற்றாறில் தலா 80 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, குழித்துறை, பேச்சிப்பாறை, கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 70 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மைலாடி, கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com