'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்துக்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்புக் குழு: ஷில்பா பிரபாகர் உத்தரவு
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க திட்டத்தின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் அறிவித்த 'உங்கள் தொகுதியில் முதல்வா்' திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுவரை சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருவாரூா், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதைக் குறிக்கும் வகையில், 10 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை அளித்தாா்.
அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமாா் 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இவை மாவட்ட வாரியாக, வகைகளாகப் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமாா் 70,000 மனுக்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் திட்டத்தின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.