தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் நாளை (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிம் அவர் கூறியதாவது, கரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சென்னையை போன்று பிற மாவட்டங்களில் கட்டளை மையம் அமைக்க ஆலோசித்து வருகிறோம். தமிழகத்தில் என்றைக்கு கரோனா நெகடிவ் என்று சொல்லப்படுகிறதோ அன்றைக்கு முழு மகிழ்ச்சி அடைவேன். மே 2ஆம் தேதியில் இருந்தே கரோனா தடுப்புப் பணிகளை தொடங்கிவிட்டேன். வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தே அதிகம் ஆலோசித்தேன்.
தமிழக மக்களின் உயிர்களை காக்க அத்தனை முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் ஆலோசனைகளுக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது பற்றி அறிவிக்கப்படும். தமிழகம் கேட்ட அளவிற்கு தடுப்பூசிகளை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. தேவையான தடுப்பூசிகளை பெற மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். தடுப்பூசி இறக்குமதிக்கு உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது.
ரூ.50 கோடி செலவில் தமிழகத்திலேயே ஆக்சிஜன், மருந்து உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் தேதிக்குள் இரண்டாம் தவணை கரோனா நிவாரண தொகை வழங்கப்படும். தமிழக மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.