திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதற்காக சனிக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்தடைந்த முதல்வர், ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.
இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.மருத்துவக் கல்லூரி மருத்துவனையை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு கார் மூலமாகப் புறப்பட்ட முதல்வர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காலை 10.55 மணி அளவில் வந்தடைந்தார்.
அங்கு 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, கரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்காக 20 கார் ஆம்புலன்ஸ் சேவையையும், தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், கரோனா நோய்த் தொற்று தடுப்புப்பணிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். இதன்பிறகு கார் மூலமாகப் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.