மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, போரூர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இன்று பார்வையிட்டார். குறிப்பாக அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிற்பேட்டை பிரமுகர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். பின்னர் போரூர் மற்றும் தியாகராய நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் வழங்கும். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வரைத் தொடர்பு கொண்டு, வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அண்மையில் வாக்குறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டினார். அந்த அடிப்படையில் தேவையான உதவிகளை மத்திய அரசு தற்போது செய்து கொண்டிருக்கிறது.
மழைக்காலங்களில் சென்னையின் நிலை இதேபோன்றுதான் நீடித்து வருகிறது. அதற்கு தொலை நோக்குடன் கூடிய நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு தயாராக வேண்டும். பல இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது. அந்தப் பணிகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.