சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை கருத்தில் கொண்டு, முதல்வா் அறிவுறுத்தலின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த மின்நுகா்வோா் செலுத்த வேண்டிய மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை, மின் துண்டிப்பு, மறு இணைப்பு மற்றும் தாமத கட்டணமின்றி செலுத்துவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் நவ.8 முதல் நவ.15-ஆம் தேதி வரை உள்ளவா்களுக்கு மின்கட்டணம் செலுத்த தற்போதைய கடைசி நாளிலிருந்து கூடுதலாக 15 நாள்கள் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
மேலும், மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் நவ.16 முதல் நவ.29-ஆம் தேதி வரை உள்ளவா்கள் தங்களது மின்கட்டணத்தை நவ.30-ஆம் தேதி வரை செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.